பிரதமர் மோடியுடன் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்த டொனால்ட் டிரம்ப்
அகமதாபாத்: இந்தியா வருகை தரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் வரலாற்று சிறப்புமிக்க மகாத்மா காந்தியடிகளின் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்.
Recommended Video
வாஷிங்டனில் இருந்து இன்று நண்பகல் அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைகிறார் டொனால்ட் டிரம்ப். அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதியினரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிடுகிறார். முதலில் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறாரா? இல்லையா? என்பதில் குழப்பம் இருந்து வந்தது.
இது தொடர்பாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா கூறுகையில், முற்பகல் 11.30 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்துக்கு டிரம்ப் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு செல்ல இருக்கிறார்.
சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்ட பின்னர் இந்தியா பாலம் வழியாக மோதிரா விளையாட்டு மைதானத்துக்கு டிரம்ப் செல்கிறார். அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவுக்கு டிரம்ப் செல்கிறார் என்றார்.
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு சபர்மதி ஆசிரமத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராக உள்ளன. தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 1917-ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் மிக முக்கிய பங்கு வகித்தது.
அண்மையில் சீனா அதிபர் ஜின்பிங், ஜப்பான் பிரதமர் அபே உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக சபர்மதி ஆசிரமத்தின் செயலாளர் அம்ருத் மோடி கூறுகையில், இங்கு டிரம்ப் 15 நிமிடம் பார்வையிட உள்ளார். காந்தியடிகளின் ராட்டை குறித்து டிரம்ப்-க்கு விளக்கம் அளிக்கப்படும். அத்துடன் மகாத்மா காந்தியின் போதனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்படும் என்றார்.