டிரம்ப் அந்த சுவரை எட்டி பார்ப்பாரா.. விசுவரூபம் எடுக்கும் குஜராத் தீண்டாமை சுவர்.. விவாதங்கள்!
குஜராத்துக்கு வரும் டிரம்ப்.. தீண்டாமை சுவரை பார்ப்பாரா?
அகமதாபாத்: இந்தியா வரும் டிரம்ப் அந்த தீண்டாமை சுவரை எட்டி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்துள்ளது.. இது குறித்த வாதங்களும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக எழுப்பப்பட்டு வருகின்றன.
Recommended Video
அதிபர் டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.. இந்த 2 நாள் பயணத்தில், பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தில் நடக்கும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.
டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு வருவதால் இந்த சம்பவம் உலக தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. குறிப்பாக வர்த்தக ரீதியான உறவு குறித்தும், நட்புறவு குறித்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.. அதே சமயம், குஜராத் மாநிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
வறுமை
குஜராத் பயணத்துக்காக ரூ.100 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளதாக வெளியானதும் அதிர்ச்சியை தந்துவருகிறது... ஏற்கனவே குஜராத் மாநிலத்தில், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, குடிநீர் என அடிப்படை பிரச்சனைகளே தீர்க்க முடியாமல் உள்ளது.. இப்போது டிரம்ப் வருகைக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்றும் இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
தீண்டாமை
மேலும், டிரம்ப் வருகையையொட்டி, அவர் பயணம் செய்யும் வழி நெடுகிலும் நீண்ட தடுப்புசுவர் கட்டப்பட்டு வருகிறது. 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த சுவர் முழுக்க ட்ரம்ப், மோடி இருவர் குறித்து பாராட்டியும், புகழ்ந்தும், எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்திரா மேம்பாலத்தின் அருகே சரணியவாஸ் அல்லது தேவ் சரண் என்பதுதான் அந்த குடிசை பகுதி.
குடிசைகள்
டிஜிட்டல் இந்தியா என்று சொல்லும் பாஜக அரசு... இதை மறைக்கவே தடுப்புச்சுவர் கட்டிவருவதாக புகார் ஒரு பக்கம் எழுந்துள்ளது. காரணம், இந்த தடுப்புச்சுவருக்கு பின்பு ஏராளமான குடிசைகள் இருக்கின்றன. இங்கு ஏராளமானோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். டிஜிட்டல் இந்தியாவில் மக்கள் இன்னும் ஏழ்மை நிலையில் இருப்பதை மறைப்பதற்காகவே இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளன என்றுதான் பகிரங்கமாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்,
பெரிய துணி
சுமார் 6 முதல் 8 அடி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்பட்டன. அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பொதுவாக யாராவது முக்கியமான நபர்கள் வந்தால் இந்த பகுதியை பெரிய துணியை வைத்து மறைத்துவிடுவார்களாம்.
கோரிக்கை
ஆனால் இப்போதுதான் சுவர் எழுப்பி நிரந்தரமாக மூடுகிறார்கள் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்... மிகப்பெரிய வளர்ந்த ஒரு ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் அதிபர் இங்கு வந்துள்ளார் என்பதால், டிரம்புக்கு இந்த சுவரை நினைவுகூர வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது... அதேபோல, இந்த வழியாக செல்லும்போது டிரம்ப் இந்த சுவற்றை பார்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்!!