ஸ்டெர்லைட்டின் வேதாந்தா ஆலையை வீரம் செறிந்த யுத்தத்தால் விரட்டிய ஒடிஷா ஆதிதிராவிட பழங்குடிகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா குழுமத்தின் பாக்சைட் தொழிற்சாலையை இடைவிடாத போராட்டத்தால் விரட்டியடித்தனர் ஒடிஷா ஆதி குடிகள்.
Recommended Video
லாஞ்ஜிகர்: ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான பாக்சைட் தொழிற்சாலையை சட்டப் போராட்டங்களாலும் மக்கள் திரள் போராட்டங்களாலும் விரட்டி அடித்தனர் ஒடிஷாவின் ஆதிகுடிகளான டோங்கிரியா கோண்டுகள்.
ஒடிஷாவின் நியாம்கிரி மலைத் தொடர் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிந்து பரந்து கிடக்கிறது. இம்மலையில் கொட்டிக் கிடக்கும் பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்க வேட்டைக் களம் அமைத்தது வேதாந்தா குழுமம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக இம்மலைத் தொடரில் வாழ்ந்து வந்த டோங்கிரியா கோண்டுகளை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி மலை அடிவாரத்தில் வேதாந்தா கட்டிக் கொடுத்த 'முகாம்களில்' அடைக்கப்பட்டனர். ஆனாலும் ஒட்டுமொத்த டோங்கிரியா கோண்டுகளை வேதாந்தா குழுமத்தால் வெளியேற்ற முடியவில்லை.
சட்ட யுத்தம், மக்கள் போராட்டம்
வேதாந்தா குழுமத்துக்கு எதிராக 12 ஆண்டுகாலம் இடை விடாத சட்ட யுத்தம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளை அதிரவைக்கும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர் டோங்கிரியா கோண்டுகள். வெளியாட்கள் எவர் நுழைந்தாலும் வேதாந்தா குழுமத்தின் அடியாட்கள் என விரட்டி விரட்டி அடித்தனர் டோங்கிரியா கோண்டுகள்.
திணறிய வேதாந்தா
இதனால் வேதாந்தா குழுமத்தால் பாக்சைட் தாதுவை நியாம்கிரியில் இருந்து வெட்டி எடுக்க முடியாமல் போனது. இந்த ஆலையை நடத்துவதற்காக ஜார்க்கண்ட், குஜராத் மாநிலங்களில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் ஒட்டுமொத்த டோங்கிரியா கோண்டு கிராமசபைகளின் இடைவிடாத எதிர்ப்பு உக்கிரத்தைக் காட்டியது.
திராவிட ஆதி குடிகள்
இதையடுத்து வேறுவழியே இல்லாமல் லாஞ்ஜிகர் வேதாந்தா பாக்சைட் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது. டோங்கிரியா கோண்டு மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதும் தாய் நிலத்தைக் காக்க தீரமுடன் போராடி வெற்றிக் கொடி நாட்டியவர்கள் 'திராவிட பழங்குடியினராகிய' டோங்கிரியா கோண்டுகள். இவர்கள் பேசுவது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. நம்மால் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்
இதேவழியில்தான் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூட பிஞ்சு குழந்தைகளும் இப்போது தூத்துக்குடி களத்தில்... ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்த தமிழகம் இப்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறது!