கற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை!
கழுதை ஒன்று அனைவருக்கும் ஜோதிடம் சொல்லி வருகிறது.
கல்புர்கி, கர்நாடகா: உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கா? இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி இதை படிச்சே ஆகணும். காரணம் ஒரு கழுதை ஜோசியம் சொல்லுதாம். வேற எங்க. நம்ம நாட்டுலதான். வெளிநாட்டுல இந்த பேச்செல்லாம் எடுபடுமா என்ன?
கர்நாடக மாநிலத்தில்தான் அந்த அதிசய கழுதை உள்ளது. அந்த கழுதையின் பெயர் பன்னாலால். கழுதையின் 'ஓனர்' பெயர் கலீல் அகமது கான். இவர், பொதுஇடத்தில், ஒரு பெரிய தடுப்பு மாதிரி வளையம் போட்டுக்கிட்டு, அதுக்குள்ள தன் கழுதையை தன்னுடன் நிற்க வைத்து கொள்கிறார். அந்த வளையத்தை தாண்டி பொதுமக்கள், அதாவது குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என எல்லோரும் நிற்கிறார்கள்.
இப்ப கழுதைகிட்ட ஓனர் கேட்கிறார், இதோ இந்த வளையத்துக்கு வெளியே நிக்கிறாங்களே... அவங்கள்ல யார் டாக்டரா வரப்போறாங்க? யார் என்ஜினியரா வரப்போறாங்க? யார் வக்கீலா வரப்போறாங்க? என்று இப்படி பல கேள்விகளை கேட்கிறார். உடனே அந்த கழுதை அங்கிருக்கும் குறிப்பிட்ட ஒருவரை நெருங்கி தன் காதால் சுட்டிக் காட்டிவிட்டு மீண்டும் தன் ஓனரிடம் வந்து நின்று கொள்கிறது.
இதுக்கு டிக்கெட் 20 ரூபாயாம். கழுதை சொல்வதை நம்புகிறார்களோ, இல்லையோ, ஆனால் ஓனர் சொல்லி இந்த கழுதை செய்வதை எல்லோரும் ரசிக்கிறார்கள் - சிரித்து மகிழ்கிறார்கள். ஆனால் விலங்கை இப்படி தொந்தரவு செய்வதாக கூறி ஒரு க்ரூப் ஓனருக்கு எதிராக கிளம்பிவிட்டார்கள்! எப்படியோ... கழுதைக்கு கற்பூரம் வாசனை தெரியாட்டியும், ஜோதிடமாவது தெரிஞ்சிருக்கே!