சல்மான்கான் பிரச்சனையை விட்டுவிடுங்கள்! - மேனகா காந்தி
டெல்லி: சல்மான்கான் போன்ற பிரபலங்களை குறிவைத்து பிரச்சனைகளை கிளப்புவதை விட்டுவிட்டு ஏற்கனவே உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில் கவனம் செலுத்துமாறு தேசிய மகளிர் ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்தது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், உடலளவில் வேதனையை அனுபவித்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்வதாகவும் கூறியிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு பெண்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இப் பிரச்சனையில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் சல்மான் கானை நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
அதற்கு அவர், தனது கருத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளனர் என பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, "சல்மான்கான் போன்ற பிரபலங்களை குறிவைத்து பிரச்சனைகளை கிளப்புவதை விட்டுவிட்டு, ஏற்கனவே உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கவனம் செலுத்துங்கள்," என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.