இனிமே இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொந்தரவு பண்ணாதீங்க.. ப்ளீஸ்.. கிண்டலாக கெஞ்சிய நீதிபதிகள்!
இனி இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொல்லை செய்யக்கூடாது என போப்பையா தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர்.
Recommended Video
டெல்லி: இனி இந்த வழக்கு தொடர்பாக எங்களை தொல்லை செய்யக்கூடாது என போப்பையா தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டலாக தெரிவித்தனர்.
கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார்.
ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
ஒத்திவைக்க சம்மதமா?
நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், எஸ்.ஏ.பாப்டே அமர்வு இன்று காலை இந்த மனு மீதான விசாரணையை தொடங்கினர். அப்போது சபாநாயகர் நியமனம் சரியில்லை எனக்கூறப்படும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா என காங்கிரஸ் கட்சியினரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அய்யோ வேண்டாம்
இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் தரப்பு, இல்லை, இல்லை இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியாக வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையாவை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
வீடியோ பதிவு
மேலும் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர வேறு எந்த அலுவலும் நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அனைத்து ஊடகங்களும்
அதற்கு பதிலளித்த பாஜக தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் வாக்கெடுப்பை ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏன் உள்ளூர் தொலைக்காட்சிகள் மட்டும், இது ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இதனை தெரிந்து கொள்ளவேண்டும். ஆகையால் அனைத்து ஊடகங்களும் வாக்கெடுப்பை நேரலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்
மேலும் இந்த வழக்கு தொடர்பாக இனிமேல் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் நீதிபதிகள் கிண்டலாக கெஞ்சினர். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நாங்களும் இனிமேல் இந்த வழக்கு தொடர்பாக உங்கள் கதவுகளை தட்டவேண்டாம் என்றுதான் நினைக்கிறோம் என நகைச்சுவையாக பதிலளித்தனர். இதனால் அங்கு சற்றுநேரம் நகைச்சுவை ததும்பியது.