வந்தே மாதரம் சொல்லனும்னா இந்தத் தகுதிகள் வேண்டும்... பிரதமர் மோடி ஆற்றிய உரை!
பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மையை கடைபிடிக்காதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தையை உச்சரிக்க உரிமையில்லாதவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லி : பெண்களை அவமதிப்பவர்கள், தூய்மை பற்றி கவலைப்படாதவர்கள் வந்தே மாதரம் என்ற வார்த்தை சொல்ல தகுதியற்றவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்த்தியதன் 125வது ஆண்டு தினம் தினதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை மன்னிட்டு டெல்லியில் மாணவர் மாநாடு நடைபெற்றது, இளைய இந்தியா, புதிய இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரதமரின் உரையை நேரலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கேட்பதற்காக சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது : "மக்கள் வந்தே மாதரம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் பெண்களை மதிக்கிறோமா?".
யாருக்கு தகுதி?
"உங்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்ல உரிமையிருப்பதாக நினைத்தால் இந்த கேள்வியை 50 முறை சிந்தித்து பாருங்கள். நம் பூமித் தாய் மீது எச்சில் உழிழ்கிறோம், அனைத்து குப்பைகளையும் வீசுகிறோம், ஆனால் இறுதியில் வந்தே மாதரம் சொல்கிறோம். நாட்டை அசுத்தப்படுத்தும் யாருக்கும் வந்தே மாதரம் என்று சொல்லும் தகுதி கிடையாது. துப்புறவுத் தொழிலாளர்கள் மட்டும் தாய்நாடு என்று சொல்லும் முதல் உரிமை பெற்றவர்கள்.
|
தூய்மை இந்தியா
தேசப்பற்றின் முக்கிய நோக்கமே நாட்டிற்காக உழைப்பது தான். கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தும் போது சில உறுதிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் கல்லூரியை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்ற உறுதியை மாணவர்கள் தருவார்கள் என்று காத்திருக்கிறேன். இளைஞர்கள் எந்திரங்கள் போல இருப்பதை நான் விரும்பவில்லை. கல்லூரிகளில் ரோஸ் டே கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை.
வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்
கோவில் கட்டுவதற்கு முன்னதாக இளைஞர்கள் முதலில் கழிப்பறையை கட்ட வேண்டும். சுகாதாரமான இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது.
இலக்கை நோக்கி
கடந்த 2014ம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கழிப்பறை வசதி என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த திட்டம் 2019ல் முடிவடையும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.