தொடரும் மோடியின் நல திட்டங்கள்- 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்?
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வரும் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக அவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்திய விவசாயம் முழுக்க முழுக்க மழையை நம்பியே உள்ளது. பருவமழையில் ஏற்படும் மாற்றம் அனைத்தும் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அப்படி பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரமான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஏற்படுத்தியதுதான் பிரதம மந்திரி ஃபாசல் பிமா யோசனா என்ற திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாய நிலங்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதி ரூ5,500 கோடியில் இருந்து ரூ13,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 3.5 கோடி விவசாயிகள் தங்களது நிலங்களை காப்பீடு செய்துள்ளனர். இது 2013ம் ஆண்டு 1.21 கோடியாக மட்டுமே இருந்தது.
பிரதம மந்திரி கிரிஷி சின்சய் யோசனா
மழை நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயம், முறையான நீர்பாசனம் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தவிர்க்க 2015ம் ஆண்டு பிரதம மந்திரி கிரிஷி சன்சய் யோசனா என்றத் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்பாசனம்
இந்தத் திட்டத்தின் கீழ் 99 நீர்பாசன திட்டங்கள் கண்டறியப்பட்டது. இதில் 21 திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் நுண் நீர்பாசனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான். அதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் 18.25 ஹெக்டேர் நிலம் நுண் நீர்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மண் வள அட்டை
விவசாயிகளின் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரித்து பயிர்ச் சாகுபடி செய்யும் வகையில், மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012ம் ஆண்டு 5 கோடி விவசாயிகள் இந்த அட்டையை பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், அடுத்த 3 ஆண்டுகளில் 14 கோடி அட்டை விவசாயிகளுக்கு வழங்க 2015ம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மண்வளச் சோதனை
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மண் வளப் பரிசோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. 2.53 கோடி மண் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது 2.3 கோடி மண் வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மண் வள அட்டை 7.11 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வேளாண் சந்தை
டிஜிட்டல் வேளாண் சந்தை கொண்டு வரப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி, நாட்டில் உள்ள 585 மொத்தவிலை சந்தைகளை ஒருங்கிணைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 200 சந்தைகள் இணைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டில் 200 சந்தைகளும் டிஜிட்டல் வேளாண் சந்தையில் இணைக்கப் பட உள்ளன. மீதமுள்ள சந்தைகள் 2018-ம் ஆண்டில் இணைக்கப்பட உள்ளன.
வேம்பு கலந்த யூரியா
வேம்பு கலந்த யூரியா விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. படிப்படியாக, வேம்பு கலந்த யூரியாவை பயன்படுத்துவதை 100 சதவீதமாக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.