கோரக்பூரில் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காத்த டாக்டர் கான்... குவியும் பாராட்டுக்கள்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து மீதமிருந்த ஏராளமான குழந்தைகளுக்கு பொருத்தி
கோரக்பூர்: உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சொந்த செலவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கி, ஏராளமான குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டாக்டர் கபீல் கானுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிஆர்டி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருக்கிறது. இதனால் கடந்த 4-ம் தேதி முதல் ஆக்சிஜன் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி, அதிர்ச்சி கொடுத்தது.
கடந்த 10-ம் தேதி இரவு மருத்துவ கல்லூரியின் மைய ஆக்ஸிஜன் பைப் லைனின் எச்சரிக்கை ஒலி நின்று போனது. ஆக்சிஜன் இல்லை என்பதை அது காட்டியுள்ளது. இதனால் 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இதே கால கட்டத்தில் ஆபத்துக்கால உதவி சிலிண்டர்களையும் பயன்படுத்தினர் டாக்டர்கள். அது இரண்டு மணி நேரம் மட்டும்தான் தாக்குப்பிடிக்கும் என்பதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மொத்த மருத்துவமனையும் திகைத்துப்போயுள்ளது.
அப்போது மிகத் துணிச்சலாக, விரைந்து முடிவெடுத்து வெளியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து பல நூறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி, பெற்றோர்களுக்கு ஹீரோவாக ஆகியுள்ளார் டாக்டர் கான்.
தடையில்லா ஆக்ஜிஸன் சப்ளை மட்டுமே, மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்ட, குழந்தைகள் உயிரைக்காக்கும் என்பதால் மருத்துவர் காபீல் கான் துரிதமாக செயல்பட்டு உள்ளார். இவரின் சமயோசித செயல்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.