சந்திரனில் தேசியக் கொடி.. கலாம் கொடுத்த ஐடியா
பெங்களூரு: இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணமான சந்திரயான் விண்கலம் ஏவப்பட்டபோது அதற்காக பெருமைப்பட்டவர் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம். சிறு குழந்தை போல குதூகலித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கலாம். மேலும் இந்தியாவின் மூவண்ணக் கொடியை நிலவில் பதிக்க வேண்டும் என்றும் நமது விஞ்ஞானிகளிடம் விருப்பம் தெரிவித்தார் கலாம். அவரது விருப்பமும் நிறைவேறியது.
சந்திரயான் விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது கையைத் தட்டி, தனது விரல்களை மடக்கிக் காட்டி பெரும் மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார். ஒரு குழந்தையின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் இந்தியாவின் நவீன தேசத் தந்தை அப்துல் கலாம்.
சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நாம் சாதித்து விட்டோம் என்றும் பெருமையுடன் முழங்கினார்.
கலாமுக்குள் இருந்த குழந்தை
கலாம் வெளிப்படுத்திய அந்த மகிழ்ச்சி எந்தவிதமான செயற்கையும் இல்லாத அழகான குழந்தையின் பேச்சாக இருந்தது. சந்திரயான் ஏவப்பட்டபோது ஒவ்வொரு நிகழ்வையும் அவர் அவ்வளவு மகிழ்ச்சியுடன், குழந்தையைப் போல பார்த்துப் பார்த்து குதூகலித்தார்.
கலாமைப் பார்த்து மகிழ்ந்த விஞ்ஞானிகள்
சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டது எந்த அளவுக்கு சந்தோஷம் கொடுத்ததோ அதே போல கலாம் காட்டிய மகிழ்ச்சியைப் பார்த்து விஞ்ஞானிகளும் மகிழ்ந்து போனார்கள். உண்மையில் சந்திரயான் வெற்றியை விட கலாமின் குழந்தைத்தனமான சந்தோஷமே அனைவரையும் குஷிப்படுத்தியது.
கூர்ந்து கவனித்த கலாம்
பூமியிலிருந்து அப்போது சந்திரயான் 3 லட்சத்து 86 ஆயிரம் கிலோமீ்ட்டர் தூரத்தில் சந்திரயான் போய்க் கொண்டிருந்தது. அதை இஸ்ரோவின் பெங்களூரு டெலிமெட்ரி மையத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் கலாம்.
நிலவில் பதிந்த இந்தியக் கொடி
மேலும் சந்திரயான் விண்கலமானது நிலவில் இந்தியாவின் தேசியக் கொடியோடு இறங்கியபோது அப்படி மகிழ்ந்து போனார் கலாம். அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
விரல்களை மடக்கி கையில் குத்தி மகிழ்ச்சி
தனது ஐந்து விரல்களையும் மடக்கி உள்ளங்கையில் குத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கலாம். செய்தியாளர்களிடம் அவர் பின்னர் பேசுகையில், இமயமலையில் நமது தேசியக் கொடி உள்ளது. இப்போது நிலவிலும் பதித்து விட்டோம். நாம் சாதித்து விட்டோம் என்றார்.
கலாமின் யோசனை
நிலவில் தேசியக் கொடியை பதிக்க வைக்கும் யோசனை முதலிடம் நம்மிடம் இல்லை. கலாம்தான் விஞ்ஞானிகளுக்கு அந்த யோசனையைக் கொடுத்தாராம். இதை பின்னர் இஸ்ரோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.