சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளின் உயிரை காத்த கோரக்பூர் டாக்டர் கான்!
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வந்து குழந்தைகளின் உயிரைக் காப்பற்றியுள்ளார் டாக்டர் கான்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த இந்த விபத்தில், தனது சமயோசித செயல்பட்டால், மேலும் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான். அதனால் அவர் பெற்றோர்களுக்கு ஹீரோவாக மாறியுள்ளார்.
கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் கடும் ஆபத்தில் சிக்கினர். அவர்களுக்கு தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை, சொந்த செலவில் வெளியில் வாங்கிவந்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான்.
இது பற்றி பிஆர்டி மருத்துவமனையில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் திரிபாதி என்பவர் கூறுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
செய்வதறியாது அனைவரும் திகைத்த போது டாக்டர் கபீல் கான், சமயோசிதமாகச் செயல்பட்டார். உடனே தனது மருத்துவ நண்பர்களுக்கு போன் பண்ணினார். அவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டார். அதனையடுத்து தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தார்.
இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் பிஆர்டி மருத்துவமனையில் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, வெளியில் சென்று 3 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்தார். அதுவும் அரைமணி நேரம்தான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே, மேலும் 10 சிலிண்டர்களை வெளியில் வாங்கி வந்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார்.
தனது சொந்த செலவில், இதை டாக்டர் கான் இதைச் செய்தார். அர்ப்பணிப்போடு அவர் செய்த உதவியால் மேலும் பல பச்சிளம் குழந்தைகள் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. இதனால் அவர் ஏழை எளிய பெற்றோர்களுக்கு ஹீரோ போல தெரிகிறார். அவரை ஹீரோவாக நினைத்து பாராட்டுகிறார்கள்" என்று கூறினார்.
இந்த நிலையில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என்ற குற்றச்சாட்டை உ.பி.மாநில அரசு மறுத்துள்ளது. மூளைக் காய்ச்சல் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.