காவிரி வரைவு திட்டத்தால் கர்நாடகாவிற்கு குஷி
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஈடான அதிகாரம் இந்த அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை வாரியம் என்றே அழைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தால் கர்நாடகாவிற்கு குஷி ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தொடர்புள்ள மாநிலங்களால், தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு திட்டத்தை இழுபறிக்கு பிறகு இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது.
அதில் காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஒரு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அது வாரியமா, ஆணையமா, குழுவா என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சாதக, பாதகங்கள்
இந்த வரைவில் தமிழகத்திற்கு சாதகமான சில அம்சங்களும், பாதகமான சில அம்சங்களும் இருப்பதாக உள்ளது. மொத்தமுள்ள 14 பக்க வரைவு அறிக்கையில், 5வது பக்கத்தில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் தமிழகத்திற்கு சாதகமானவை. அதில் கூறியிருப்பதாவது: நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் ஒரு சில திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அமல்படுத்த இந்த அமைப்பிற்கு அதிகாரம் உள்ளது. காவிரி இருப்பு, திறந்துவிடுவது, திறந்துவிடப்பட்ட நீர் அளவை பார்வையிடுவது ஆகியவற்றின் பொறுப்பை இந்த அமைப்பு மேற்கொள்ளும். காவிரி ஒழுங்காற்று குழுவின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசுக்கு அதிகாரம்
9ம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எந்த மாநிலமாவது சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த மறுத்தால் மத்திய அரசின் உதவியை இந்த அமைப்பு நாடலாம். சூழலுக்கு தக்கவாரு, இந்த அமைப்புக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அமைப்பு தன்னாட்சி பெற்ற அமைப்பாக இல்லாமல் மத்திய அரசின்கீழ் செயல்படும் அமைப்பாக உள்ளதை பார்க்க முடிகிறது. இது தமிழகத்திற்கு பாதகமாகும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், காவிரி அமைப்பு விதிகளை செயல்படுத்தும் அமைப்பாக இல்லாமல், முடிவுகளை உருவாக்கும் அமைப்பாக உள்ளது.
வாரியத்திற்கு ஈடான அதிகாரம்
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஈடான அதிகாரம் இந்த அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை வாரியம் என்றே அழைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடியாக வாரியம் என மத்திய அரசு குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தால் அதிகாரம் உறுதியாகியிருக்கும்.
ஒழுங்காற்று குழு அமைகிறது
இதனிடையே, காவிரி தீர்ப்பை செயல்படுத்த, 9 பேர் கொண்ட ஒழுங்காற்று குழு காவிரி இதற்காக அமைக்கப்படும் என்று இந்த வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழகத்திற்கு சாதகமான அம்சமாக உள்ளது. ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் பிரதமர் மோடியிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் முன் வைத்த கோரிக்கையாகும். அது நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியமான ஒன்றாகும்.
அணைகளின் கட்டுப்பாடு
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஈடான அமைப்பு இதுவாக இருந்திருக்கும் என்றால், கர்நாடகா அணைகள், தமிழக அணைகள் கட்டுப்பாட்டை இந்த அமைப்பு நிர்வகிக்க முடியும்.ஆனால் அப்படி இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துவிட்டார். எனவே தமிழகத்திற்கு இதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.