கமல்நாத் அரசுக்கும் தலைக்கு மேல் கத்திதான்! கர்நாடகா ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் அம்போதான்!
போபால்: பாஜக தரப்பில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை இழுத்துவிட்டதாக கெத்து காட்டி வருகிறார் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத். ஆனால் கர்நாடகா ஆபரேஷனைப் போல எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் ஆபரேஷனை பாஜக அமல்படுத்தினால் குமாரசாமி போல முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்ய நேரிடும் என்பதுதான் யதார்த்தம்.
230 எம்.எல்.ஏக்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். பெரும்பான்மைக்கு தேவை 115.
காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள், சமாஜ்வாடி கட்சியின் 1 எம்.எல்.ஏ, 4 சுயேட்சைகள் ஆதரிக்கின்றனர். முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் தடுப்பணைகள்... தமிழக அரசு மெத்தனம்- வைகோ கண்டனம்
ஜேடிஎஸ்-காங். கூட்டணி
அதாவது கர்நாடகாவைப் போலதான்.. கர்நாடகாவில் பாஜக 105 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தது. ஆனால் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் 115 எம்.எல்.ஏக்கள் கிடைத்தது. கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்.எல்.ஏக்கள்தான்.
ஜேடிஎஸ்-காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
இந்த நிலையில்தான் 16 எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து பரமபத விளையாட்டில் இறங்கியது பாஜக. எம்.எல்.ஏக்களை ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்ததால் தகுதி நீக்கம் செய்ய முடியுமா? முடியாதா? என்கிற சட்ட சிக்கலை உருவாக்கியது பாஜக.
கவிழ்க்கப்பட்ட குமாரசாமி அரசு
கடைசியாக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்துக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுப்பியும் வைக்கவில்லை. இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. தற்போது கர்நாடகாவில் பாஜக அரசு அமைய உள்ளது.
கமல்நாத் அரசுக்கும் ஆபத்து
இதேபாணியில் 10 அல்லது 15 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கமல்நாத் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு பாஜக தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் கமல்நாத் அரசும் கவிழ்ந்து மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசு அமையவே வாய்ப்பிருக்கிறது.