வந்தது புது சட்டம்.. கோவா செல்லும் சுற்றுலா பயணிகளே உஷார்.. இதை செய்தால் 3 மாதங்கள் சிறைதான்
Recommended Video
பானாஜி: கோவாவின் கடற்கரைகளில் மது குடிப்பது அல்லது சமையல் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால், ரூ. 2,000 அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைதண்டனை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், சுற்றுலா வர்த்தக சட்டம் பதிவு, திருத்தத்தின் படி இந்த புதிய விதிமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 29 ம் தேதி தொடங்கும் மாநில சட்ட சபை அமர்வில் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கர் தெரிவித்துள்ளார்.
கைதுக்கு வாய்ப்பு
"கடற்கரையில் பாட்டில்களை உடைப்பது, கடற்கரைகளை போன்ற பொது இடங்களில் மது அருந்துவது, சமைப்பது போன்றவற்றை தடுக்க இந்த திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறோம். அவ்வாறு செய்தால் அபராதம் 2,000 ரூபாயாக இருக்கும். அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றவாளி கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு சிறையிலடைக்கப்படலாம் "என்று அஜ்கோன்கர் மேலும், கூறினார்.
சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு
கோவாவில் மதிப்புள்ள சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்ப்பதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த இரு வருடங்களாக கோவா வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு, அங்கே அநாகரீக செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில்தான், புதிய சட்டத் திருத்தத்தை கோவா மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
தப்ப முடியாது
குடித்துவிட்டோ, பாட்டிலை உடைத்துவிட்டோ அல்லது பொது இடத்தில் சமைத்துவிட்டோ யாரும் தெரியாமல் தப்ப முடியாது. அந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள், சுற்றுலாத்துறையினரின் வாட்ஸ்அப் மூலம் பரிமாரப்பட்டு எங்கேயிருந்தாலும் பிடிக்கப்படுவார்களாம்.
உஷாரய்யா, உஷார்
வீக் என்ட்டுக்கு கோவா செல்வோரே, அரசின் இந்த புதிய உத்தரவை மனதில் வைத்து செல்லுங்கள். அல்லது, சுற்றுலா சென்றுவிட்டு 3 மாதங்கள் அங்கேயே சிறை தண்டனை அனுபவித்து 4வது மாதம்தான் ஊருக்கு திரும்பும் நிலை ஏற்படக்கூடும். உஷார்!