நாட்டில் இப்போ விபச்சாரம், கூலிப்படை கொலைகள் குறைய காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் அடடே
Recommended Video
டெல்லி: விபச்சாரம் நாட்டில் குறைந்துவிட்டதற்கு காரணமே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டு ஓராண்டாகியுள்ள நிலையில், அதன் பாதிப்புகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன.
அதேநேரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து, மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் பிரசாரங்கள் செய்து வருகிறார்கள்.
பெண் கடத்தல்
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களிடம் பண மதிப்பிழப்பு நன்மைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு பெண்களை கடத்தி வந்து விபசாரம் நடத்த வைத்தனர். விபசார பெண்களுக்கு பணம் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது அது கட்டுக்குள் வந்துள்ளது.
கூலிப்படை கொலை குறைப்பு
விபசாரம் மட்டுமல்லாது, கூலிப்படை கொலைகளையும் குறைத்துள்ளது அரசின் நடவடிக்கை. மும்பை இதற்கு உதாரணம். காஷ்மீரில் ராணுவத்திற்கு எதிரான கல்வீச்சு குறைந்துள்ளது. நக்சலைட்டுகள் தாக்குதல் குறைந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் டிஜிட்டல் முறைக்கு பரிவர்த்தனை மாற்றப்பட்டதுதான்.
ஊழல் ஒழிப்பு
பணத்திற்கு கணக்கு காட்டி, இந்தியாவை ஒரு நேர்மையான நாடாக மாற்றும் முயற்சிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கை. உலகின் எந்த மூலைக்கு சென்று ஒழிந்து கொண்டாலும் ஊழலை தேடி ஒழிக்காமல் ஓயாது இந்த அரசு.
ராகுலுக்கு என்ன தெரியும்?
இந்திய பொருளாதாரம் குறித்த ராகுல் காந்தியின் அறிவு என்பது விவாதத்திற்கு எடுக்கப்பட வேண்டியது. காங்கிரசின் தலைமை பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்தது திறமையால் அல்ல, வாரிசு அரசியலால்தான். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.