கடனை செட்டில் செய்யும்வரை டீல் பணம் ரூ.500 கோடியை தொடக்கூடாது.. மல்லையாவுக்கு செக்
பெங்களூர்: கடன்காரர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தும் வழக்கு முடிவுக்கு வரும்வரை, மதுபான நிறுவனத்தை விற்றதன் மூலம் கிடைக்கும் ரூ.515 கோடியை தொடக்கூடாது என பெங்ளூரை சேர்ந்த கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ உட்பட 17 வங்கிகளிடமிருந்து ரூ.7800 கோடியை கடனாக வாங்கியிருந்தது, மல்லையா வின் யுனைட்டட் ப்ரீவரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டட் (யூபிஹெச்எல்).
கடன் தொகையை, திருப்பி கேட்டு, மல்லையா வுக்கு எதிராக பெங்களூரிலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ 3 வருடங்களுக்கு முன்பே வழக்கு போட்டிருந்தது. அப்படியிருந்தும், விஜய் மல்லையா கடனை திருப்பியளிக்க முயற்சி எடுக்காததை கவனித்த எஸ்.பி.ஐ, அவரையும், அவரது நிறுவனத்தையும், "wilful defaulter" என அறிவித்தது.
வேண்டுமென்றே கடன் பணத்தை திருப்பி தராதவர்கள், எந்த நோக்கத்திற்கு பணத்தை வாங்கினார்களோ அதை தவிர்த்து பிற நோக்கத்திற்காக பணத்தை செலவிட்டவர்கள், கடன் தொகை எந்த சொத்தின் பெயரால் வாங்கப்பட்டதோ, அதை, வங்கிக்கே தெரியாமல் விற்பனை செய்துவிட்டவர்களைத்தான் "wilful defaulter" என்று அழைப்பர்.
இதையடுத்து, டெல்லி ஹைகோர்ட்டில் மல்லையா மனு தாக்கல் செய்து "wilful defaulter" என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரியிருந்தார். அதேநேரம், எஸ்.பி.ஐ வங்கியோ, மல்லையா வை கைது செய்வதோடு அவரது பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் என்று வாதிட்டது.
மேலும், மல்லையா வுக்கு சொந்தமான, மதுபான நிறுவனத்தை ஐரோப்பிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சமீபத்தில் டீல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி, அதில் கிடைக்கும் ரூ.515 கோடியை தங்கள் வங்கிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இன்று இதை விசாரித்த தீர்ப்பாயம், இந்த கடன் பிரச்சினை ஓயும் வரை, மல்லையா வுக்கு வரும் ரூ.515 கோடியை அவர் பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மதுபான நிறுவனத்தை விற்பதால் கிடைக்கும் எஞ்சிய தொகையை அடுத்த 4 ஆண்டுகளுக்கு படிப்படியாக வழங்குவதாக ஐரோப்பிய நிறுவனம் கூறியிருந்தது. அந்த பணத்தையும் சேர்த்தால், மல்லையா வுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு ஓரளவுக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைத்துவிடும் என தெரிகிறது.