வயிற்றில் கடத்திய கொகைன் கேப்சூல் வெடித்ததில் தான்சானியா கடத்தல்காரன் பலி
மும்பை: சினிமா பாணியில், மும்பைக்கு வயிற்றில் போதைப்பொருள் கடத்தி வந்த ஆப்பிரிக்க நாட்டவர் ஒருவர், எதிர்பாராத விதமாக வயிற்றில் இருந்த போதைப்பொருள் காப்சியூல் வெடித்ததில் பலியானார்.
ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விமானம் மூலம் நேற்று மும்பை வந்தனர். அவர்கள் இருவரும் போதை மருந்து கடத்தி வருவதாக மும்பை குடியுரிமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர். ஆனால், சந்தேகப் படும் படியாக எதுவும் சிக்கவில்லை.
அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் தோள் பட்டை வலிக்கு சிகிச்சை பெற இந்தியா வந்திருப்பதாக தெரிவித்தார்கள். ஆனபொதும், அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்கள் வயிற்றில் போதை மருந்து கடத்தி வந்திருக்கலாம் என கருதினர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மும்பை நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்து வயிற்றை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க அனுமதி பெற்றனர். அப்போது அவர்களில் ஒருவர் திடீர் என வயிற்றில் வலி உண்டாகி இருப்பதாகக் கூறினான். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு, அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
ஆனால், மருத்துவமனையில் அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் மருத்துவமனை வரும் வழியிலேயே இறந்து விட்டதை உறுதி செய்தனர். பின்னர், அவனது உடலைப் பரிசோதித்துப் பார்த்த போது, வயிற்றிற்குள் கொகைன் போதைப் பொருள் கேப்சூல் வடிவில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது அம்பலமானது.
மேலும், வயிற்றில் இருந்த போதை மருந்து கேப்சியூல் வெடித்ததாலேயே அந்நபர் வயிற்று வலியால் அவதிப்பட்டு மரணமடைந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட மற்றொரு நபரின் வயிற்றிலிருந்த 50 போதை மருந்து கேப்சூல்களை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், அவனிடம் மேற்கொண்டு நடத்தப் படும் விசாரணை மூலம், மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.