நொய்டாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு போதை பொருட்கள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில், 1,818 கிலோ எடை சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றிய தகவல்களை தெரிவித்த மாதவ் சிங் என்ற அதிகாரி, கடந்த சிலநாட்களுக்கு முன் டெல்லி விமான நிலையத்தில் தென்னாப்பிரிக்கா பெண் பயணி ஒருவர், 24.7 கிலோ எடை கொண்ட சூடோஎபிட்ரின் (pseudoephedrine)என்ற போதை மருந்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டிருந்தார். இது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இந்த பொருள்தான் போதை மருந்து தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள்.
அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள வீடு ஒன்றில் ஏராளமான போதை பொருட்கள் மற்றும் மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 1,818 கிலோ சூடோஎபிட்ரின் மூலப்பொருள் பொட்டலம் கட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு ரூ.24 கோடி மதிப்புள்ள கொகைன் போதை மருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது எங்களுக்கு கை வந்த கலை.. இப்படித்தான் ஆட்சி அமைக்க போகிறோம்.. ஹின்ட் கொடுத்த மோடி!
சோதனையின் போது அந்த வீட்டிலிருந்த நைஜீரிய நாட்டு ஆணும், பெண்ணும் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அவர்கள் வீட்டு புரோக்கர் மூலம் அந்த வீட்டை தாம் வாடகைக்கு விட்டதாகவும், அங்கு நடந்து வந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தமக்கு தெரியாது என்றும் கூறினார்.
மேலும் கடந்த 1 வருடமாகவே அந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் எனக்கு வீட்டு வாடகையை கொடுக்கவில்லை. இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் கூறியதாக அதிகாரி மாதவ் சிங் தெரிவித்தார்