ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் முன்பு சிறுநீர் கழித்த 'குடி'மகனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
டெல்லி: டெல்லியில் இருந்து இங்கிலாந்திற்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மையப்பகுதியில் சிறுநீர் கழித்த பயணிக்கு ரூ.97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் நகருக்கு சென்றுள்ளது. ஜினு ஆபிரகாம்(39) என்பவர் தனது 10 வயது மகனுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அவர் மது அருந்துவிட்டு போதையில் தனது இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் மையப் பகுதிக்கு வந்தார். வந்தவர் அனைத்து பயணிகள் முன்பும் சிறுநீர் கழித்தார். இதையடுத்து சிப்பந்திகள் வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றபோது பிடிவாதம் பிடித்தார்.
உடனே சிப்பந்திகள் பிளாஸ்டிக் கைவிலங்கு போட்டு அவரை இருக்கையின் கம்பியோடு கட்டினர். விமானம் தரையிறங்கிய பிறகு ஜினு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ. 97 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து ஆபிரகாம் கூறுகையில்,
நான் இரண்டு கிளாஸ் விஸ்கி குடித்தேன். மன அழுத்தத்திற்கான மருந்து உட்கொண்டு வரும் எனக்கு விஸ்கி குடித்த பிறகு என்ன நடந்தது என்றே நினைவு இல்லை என்றார்.
ஆபிரகாமின் வழக்கறிஞர் கூறுகையில்,
ஆபிரகாமின் இரண்டாவது குழந்தை இறந்ததில் இருந்து அவர் மன அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்கிறார். அவரின் மனைவியும் மற்றொரு குழந்தையும் வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்தனர். விமானத்தில் பயணம் செய்வதை நினைத்து பதட்டமாக இருந்த ஆபிரகாம் தனியாக பயணிக்கும் தனது மனைவியை நினைத்தும் கவலையில் இருந்தார்.
அவர் எடுத்துக் கொண்ட மருந்தில் தான் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் அவர் சிறுநீர் கழித்ததாகக் கூறியதை கேட்டு அவரே அதிர்ச்சி அடைந்தார் என்றார்.