பெங்களூரில் 6 வாகனங்களை மோதி தூக்கி வீசிய பென்ஸ்.. சினிமா பாணி விபத்தில் ஒருவர் சாவு! வீடியோ இதோ
பெங்களூர்: பெங்களூரில், நடந்த சங்கிலி தொடர் விபத்தில் தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் வேகத்தில் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார், பிற வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு செல்லும் காட்சி சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது.
பெங்களூர் நகரின், மத்திய பகுதியான ஜெயநகரிலுள்ளது, மாதவன் பூங்கா. நேற்று மதியம், சங்கர் என்ற நகரின் முன்னணி அறுவை சிகிச்சை மருத்துவர் தனது பென்ஸ் காரை ஓட்டியபடி இவ்வழியாக சென்றார். அப்போது காருக்குள், வீட்டு வேலைக்காரர் மற்றும் அவரது மகளும் இருந்துள்ளனர்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், முன்னால் சென்ற இரு கார்களை முட்டி, மோதி தூக்கி வீசிவிட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியது. இவ்வாறு 6 வாகனங்களை இடித்து சென்ற பென்ஸ் கார், இறுதியில் வீடு ஒன்றில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற தையல் தொழிலாளி ரிஸ்வான் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய மனைவி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து, தகவல் அறிந்தவுடன் சித்தாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், சங்கரை கைது செய்தனர். சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், சங்கரை இழுத்து போட்டு அடித்து உதைத்துள்ளனர். இதனால் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சங்கர் குடித்திருந்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள். அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அதனால்தான் இவ்வாறு ஒரு விபத்து நடந்துவிட்டதாகவும், காருக்குள் இருந்த அவரது வேலைக்காரர் தெரிவித்துள்ளார்.