லோக்சபாவில் 'மது' போதையில் தாக்க வந்த பாஜக எம்.பி... திரிணாமுல் காங்கிரஸ் பகீர் புகார்!
டெல்லி: லோக்சபாவில் பாரதிய ஜனதா எம்.பி. ஒருவர் மதுபோதையில் தங்களது கட்சி பெண் எம்.பி.க்களை தாக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரஸ் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வரும்போதெல்லாம் ஒருவர் குடித்துவிட்டே வருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா, அவரும் அவருதான் ஊற்றிக் கொடுத்தாரா என்று என எதிர்தரப்பில் இருந்து பதில் வந்தது நாடறியும்.
இப்போது இத்தகைய பகீர் புகார் லோக்சபாவில் பாஜக எம்.பி. ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லோக்சபாவில் இன்று ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
அப்போது தங்களது மாநிலங்களுக்கு உரிய ரயில் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று கூறி பல்வேறு மாநில கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே மோதலும் ஏற்பட்டது.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள், முழக்கமிட்ட எங்கள் உறுப்பினர்களை மிரட்டினர். சிலர் அடிக்கவும் பாய்ந்தனர் என்றார்.
மற்றொரு எம்.பி. ககோலி கோஷ் கூறுகையில், லோக்சபாவில் அமைதியான முறையில் நாங்கள் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம். அப்போது மதுபோதையில் இருந்த பாஜக எம்.பி. ஒருவர் எங்களை நோக்கி அவதூறாக பேசியதுடன் தாக்க முனைந்தார் என்றார்.