எங்கடா என் சரக்கை காணோம்... மதுக்கடையை சூறையாடிய குடிகார போலீஸ்காரர்!
குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், குடித்து விட்டு நல்ல போதையில் வந்த ஒரு போலீஸ்காரர், ஒரு மதுக் கடைக்குள் புகுந்து தனக்குப் பிடித்த சரக்கு இல்லை என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குவாலியரில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள சந்திரவத்னி என்ற இடத்தில் உள்ள ஒரு மதுக் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் ஒரு போலீஸ்காரர். அழரது பெயர் அசோக் டோமர். ஏற்கனவே நல்ல போதையில் இருந்த அவர் மதுக் கடைக்குள் சென்று தனக்குப் பிடித்த மதுவின் பெயரைக் கேட்டுள்ளார். ஆனால் அப்போது அது ஸ்டாக் இல்லையாம்.
இதனால் கோபமடைந்த டோமர், கடையில் இருந்த மது பாட்டில்களைத் தூக்கி் போட்டு உடைத்தார். எனக்குப் பிடித்ததை வாங்கி வைக்க முடியாதா என்று கேட்டு கலாட்டாவில் குதித்தார். இதனால் கடையில் கூட்டம் கூடி விட்டது. பலரும் கூட குடிகார போலீஸ்காரர் செய்த கலாட்டாவை வேடிக்கை பார்த்தார்.
அவரது கோபத்தில் சிக்கி பல பாட்டில்கள் உடைந்தன. கூட்டம் கூடியதைத் தொடர்ந்தும், சில பத்திரிகையாளர்கள் வந்ததைத் தொடர்ந்தும் டோமர் அங்கிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
இந்த சம்பவம் குவாலியரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.