குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர்: டெல்லி கோர்ட் கண்டனம்
குடிபோதையில் வாகனம் ஓட்டு பவர், தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர் என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர் என்று டெல்லி நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த ரவி ஷங்கர் என்பவர் குடி போதையில் ஸ்கூட்டர் ஓட்டியதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தேதி தீர்ப்பு கூறியது.
அப்போது ரவி ஷங்கருக்கு ஐந்துநாள் சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளியின் ஓட்டுனர் உரிமத்தை ஆறுமாத காலத்துக்கு ரத்து செய்யுமாறும் டெல்லி போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ரவி ஷங்கர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் கோர்ட் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டு பவர், தற்கொலைக்கு தயாராக இருக்கும் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர். ஆபத்து நிறைந்த இவர்களால் சாலையில் செல்லும் அப்பாவிகளுக்கு நேரும் விபரீதத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மாஜிஸ்திரேட் கோர்ட் முன்னர் விதித்த அபராதம், சிறை தண்டனை, ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து ஆகிய தண்டனைகளை உறுதிப்படுத்தி உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.