ரெயின்கோட் என நினைத்து.. போதையில் கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்ற ‘குடிமகன்’ !
போதையில் ரெயின்கோட் என நினைத்து கவச உடையைத் திருடிச் சென்று கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார் குடிமகன் ஒருவர்.
நாக்பூர்: நாக்பூரில் மதுபோதையில் இருந்த நபர் ரெயின் கோட் என நினைத்து கொரோனா பாதுகாப்பு கவச உடையைத் திருடிச் சென்று, கொரோனா பாதிப்புக்கு ஆளான சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
கொரோனா பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து, களப்பணியாளர்கள் கவச உடை அணிந்து வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு கவச உடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தும் அந்த கவச உடையை, கடந்த மாதம் திருடர்கள் திருடுவதற்கு முகமூடியாகப் பயன்படுத்திய சம்பவம் நடந்தது. தற்போதும் அதேபோல், கவச உடையை மழையில் நனையாமல் இருக்க பயன்படுத்தும் ரெயின் கோட் என நினைத்து ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மாஸ்க் அணியாததால் விமானத்துக்குள் கைகலப்பு...பயணிகள் அதிர்ச்சி!!
போதையில் காயம்
சம்பந்தப்பட்ட நபர் நாக்பூரைச் சேர்ந்தவர். காய்கறி வியாபாரியான அவர் மதுபோதையில் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெற மாயோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அணியும் பிபிஇ கிட் எனப்படும் கவச உடை அவரது கண்ணில் பட்டுள்ளது.
பொய் வேற...
அதனை ரெயின் கோட் என தவறாக நினைத்த அவர், யாருக்கும் தெரியாமல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது திருடிக் கொண்டு வந்து விட்டார். மழைக்கு அதனை ரெயின் கோட் போலவும் பயன்படுத்தியுள்ளார் அந்நபர். அதைப் பார்த்து விசாரித்த நண்பர்களிடம், ‘ஆயிரம் ரூபாய் கொடுத்து கடையில் இந்த ரெயின் கோட்டை வாங்கியதாக' கதை அளந்துள்ளார்.
எரிக்கப்பட்டது
ஆனாலும் அது கொரோனா பாதுகாப்பு கவச உடை என்பதை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக இது தொடர்பாக அப்பகுதி சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த சுகாதார ஊழியர்கள், அந்நபரிடம் இருந்த கவச உடையைக் கைப்பற்றி, அதனை எரித்து விட்டனர்.
தொற்று உறுதி
ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கொரோனா தொற்று சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் அந்நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
தனிமைப்படுத்துதல்
நல்லவேளையாக அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கு கொரோனா பரவவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம். ஆனாலும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிக தொற்று
நாட்டிலேயே அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம் மகாராஷ்டிரா தான். அங்கு சிகிச்சை பெற்று குணமடைபவர்கள் அதிகம் இருந்தாலும், உயிரிழப்பும் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.