பெண் போலீஸ் கழுத்தை பிடித்து நெரித்த மாடல் அழகி- காக்க முடியாமல் தவித்த போலீசார்!
மும்பை: மும்பையில் மதுபோதையில் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வெர்சோவாவில் உள்ள இன்லக்ஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாடல் அழகி தேவ்தத்தா. இவர் சம்பத்தன்று இரவு தன் வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு சென்றனர். அப்போது தேவ்தத்தா அளவிற்கு அதிகமாக மது குடித்துவிட்டு மிதமிஞ்சிய போதையில் இருந்தார்.
வீட்டு உரிமையாளர் மீது அவதூறு:
மேலும் போலீசாரின் கண்முன்னே அவர் வீட்டின் உரிமையாளர் லதாவை அவதூறாக பேசி பொருட்களை தூக்கிபோட்டு உடைத்தார். இதையடுத்து அவர்கள் போலீஸ்நிலையத்தில் இருந்து மேலும் 2 ஜீப்களில் போலீசார், பெண் போலீஸ் அதிகாரிகளை அங்கு வரவழைத்தனர்.
எல்லை மீறிய நிலைமை:
அங்கு வந்த போலீசார் தேவ்தத்தாவை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறி போகவே போலீசார் மாடல் அழகி தேவ்தத்தாவை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கழுத்தை பிடித்து நெரிப்பு:
அப்போது அவர் போலீசாரை தரக்குறைவாக பேசி திட்டியபடியே வந்தார். மேலும் திடீரென முன் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார்.
வேடிக்கை பார்த்தனர்:
இந்தநிலையில் போலீஸ் நிலையம் சென்ற பிறகும் மாடல் அழகிக்கு அடித்த போதை இறங்கவில்லை. போலீஸ் நிலையத்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் தவிர போலீசாரையும் தாக்க தொடங்கினார். இருப்பினும் போலீசாரால் மாடல் அழகியை கட்டுப்படுத்த முடியவில்லை.
அடக்குமுறை கூடாது:
மும்பை மக்கள் மீது போலீசார் எக்காரணத்தை கொண்டும் அடக்குமுறைகளை கையாளக்கூடாது என கமிஷனர் உத்தரவிட்டு 2 நாட்கள் கூட ஆகாததால் போலீசார் பல்லைக்கடித்து கொண்டு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாடல் அழகி தேவ்தத்தாவை பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அவதூறாக பேசியவர்கள்:
இது குறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது லால்பாக் ராஜா மண்டலினுள் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக பெண் ஒருவர் நுழைய முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது அந்த பெண், போலீசாரை அவதூறாக பேசினார்.
நடவடிக்கை எடுக்க பயம்:
இந்தநிலையில் அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தாக்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்தில் 3 பெண் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அவமானப் படுத்துபவர்கள்:
இதேபோல் அந்தேரி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடியை போலீசார் தாக்குவது போன்ற வீடியோவால் சர்ச்சை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்களால் எங்களை அவமானப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயமாக உள்ளது''என்கின்றார்.