டெல்லியில் கொள்ளையடிக்க வந்து ஏ.டி.எம். மையத்தில் தூங்கிய 'குடி'மகன்
டெல்லி: டெல்லியில் கொள்ளையடிக்க வந்த ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையன் தூங்கியதால் போலீசில் சிக்கினார்.
டெல்லியில் உள்ள அஸ்தா விஹார் பகுதியில் இருக்கும் ஐடிபிஐ வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க 5 பேர் குடிபோதையில் கடந்த சனிக்கிழமை வந்தனர். அவர்கள் எந்திரத்தின் ஒரு பகுதியை திறந்தபோதிலும் அவர்களால் பணம் இருக்கும் இடத்தை திறக்க முடியவில்லை. அப்போது கொள்ளையர்களில் ஒருவரான தீபக்(21) பணப் பெட்டியை திறக்க கையைவிட அது எந்திரத்தில் சிக்கிக் கொண்டது.
அவரது கையை எடுக்க முயன்றும் வரவில்லை. அவர்கள் கையை இழுக்கிறேன் என்ற பெயரில் கூச்சல் போட்டனர். இதனால் நிச்சயம் போலீசார் வருவார்கள் என்று நினைத்து மற்ற 4 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
கையை எடுக்க பல முறை முயன்றும் முடியாததால் தீபக் சோர்வடைந்தார். பின்னர் தீபக் ஏ.டி.எம். மையத்திலேயே தூங்கிவிட்டார். அதிகாலை 3 மணிக்கு அந்த வழியாக வந்த பாதுகாவலர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் திறந்தவாறு அதன் அருகில் ஒருவர் தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து தீபக்கை கைது செய்து சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தீபக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சி நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை சரிபார்த்து வருகிறார்கள்.
ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளியை பணியமர்த்துமாறு கூறியும் வங்கி கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.