”ஓவர்” குடியால் வந்த வினை- டிரக்கை ரயில்வே டிராக்கில் நிறுத்தி “டிராபிக் ஜாம்” செய்த டிரைவர் கைது!
பானிபட்: ஹரியானா பானிபட் ரிவாரி நகரில் குடிபோதையில் டிரக் ஒன்றினை ஓட்டி வந்த ஓட்டுநர் வழிமாறிப் போய் ரயில்வே டிராக்கில் டிரக்கினை செலுத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனால் பலமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கிட்டதட்ட பல மீட்டர் தூரம் வந்தபின்னர்தான் அவருக்கு புத்தியில் உரைத்துள்ளது தான் டிரக்கினை வழிமாறி ஓட்டி வருகின்றோம் என்பதே.
சிமெண்ட் மூட்டைகள் நிறைந்த அந்த டிரக்கானது பிசியான ரயில்வே டிராக்கில் வழி மாறி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில், ரிவாரி-டெல்லி ரயில்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதி அது.
உடனடியாக ரயில்வே போலீசாரால் அனைத்து ரயில்களும் வேறொரு டிராக்கில் மாற்றிவிடப்பட்டன. டிரக் வேறு தண்டவாளத்தில் நன்றாக சிக்கிக் கொண்ட காரணத்தினால் முதலில் சிமெண்ட் மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டபின், கிரேன் மூலமாக டிரக் டிராக்கிலிருந்து அகற்றப்பட்டது.
எனினும், டிரக்கினை தண்டவாளத்திலிருந்து வெளியேற்ற ஜெய்ப்பூரில் இருந்து சிறப்பு கிரேன் வரவழைக்கப்பட்டதால் 7 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இன்னும் மது போதையின் பிடியில் உள்ள டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.