பாரில் ஓவராகக் குடித்து விட்டு கும்மாளம் போட்ட குரங்கு.. அலறி அடித்து ஓடிய ரியல் ‘குடிமகன்கள்’!
பெங்களூரு: கர்நாடகா பார் ஒன்றில் குரங்கு ஒன்று குடித்து விட்டு ரகளை செய்ததால், அங்கிருந்த மற்றவர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பானஸ்வாதி அருகே உள்ளது கம்மனஹள்ளி என்ற ஊர். இங்குள்ள திவாகர் என்ற பாருடன் கூடிய ரெஸ்டாரண்டிற்கு மற்ற 'குடிமகன்’களைப் போலவே குரங்கு ஒன்றும் ரெகுலர் கஸ்டமராம்.
அங்கு வருபவர்கள் சாப்பிட்டு மீதம் வைக்கும் உணவு மற்றும் கிளாஸ்களில் இருக்கும் மீதி சரக்கை குடிப்பது தான் அந்தக் குரங்கின் வாடிக்கை.
வழக்கம்போல, குரங்கார் கடந்த திங்களன்று இரவும் பாருக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அளவுக்கு அதிகமான மதுவை அது குடித்துள்ளது. தானாக அதிக மதுவைக் குடித்ததா அல்லது அங்கிருந்த விஷமிகள் யாரும் அதனைக் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தனரா எனத் தெரியவில்லை.
ஆனால், அதிக மது குடித்ததால் போதையில் 'குரங்காட்டம்’ ஆடியுள்ளது அது. மேஜைக்கு மேஜை தாவி பாருக்கு வந்திருந்தவர்களைப் பயமுறுத்தியுள்ளது.இதனால் மது அருந்த வந்திருந்த சிலர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், சில விலங்கு நல ஆர்வலர்களும் அந்தக் குரங்கைப் பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களது பிடிக்குள் சிக்காமல் போக்குகாட்டி விளையாடியுள்ளது குரங்கு.
பின்னர் ஒருவழியாக நள்ளிரவில் போதையாலும், ஆட்டம் போட்டதாலும் களைப்படைந்து அந்தக் குரங்கு உறங்கத் தொடங்கியுள்ளது. அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, ஆட்டோ டிரைவர் ஒருவரின் உதவியோடு பார் உரிமையாளர் அதனை அங்கிருந்து ஒருவழியாக வெளியேற்றியுள்ளனர்.
குரங்கு செய்த ரகளையால் அங்கு சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.