எனிக்கு பாட்டில் வேணும் சாரே... கால்கடுக்க 'கியூ' வில் நிற்கும் கேரளத்து "குடிமோன்கள்''!
உச்சநீதிமன்ற உத்தரவால் கேரளாவில் டாஸ்மாக் கடைகள் முன்பு உள்ள கியூவில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க குடிகாரர்கள் காத்திருந்தனர்.
திருவனந்தபுரம்: உச்சநீதிமன்ற உத்தரவால் கேரளாவில் டாஸ்மாக் கடைகள் முன்பு உள்ள கியூவில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கால் கடுக்க குடிகாரர்கள் காத்திருந்தனர். சரக்கு வாங்க அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் பல மூடப்பட்டன.
சில மதுக்கடைகள் ஊருக்குள் இடமாற்றம் செய்யப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
கேரளாவில் 207 கடைகள் மூடல்
இதேபோல் கேரளாவில் 207 மதுக்கடைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் மூடப்பட்டுள்ளன. அரசுக்கு சொந்தமான 807 மதுக்கடைகளில் மட்டுமே சரக்கு கிடைக்கிறது.
அலைமோதிய கூட்டம்
இதனால் திறந்துள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, கேரள டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் குவிந்தது.
கால்கடுக்க காத்திருப்பு
3 முதல் 5 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்துநின்று குடிகாரர்கள் சரக்கு வாங்கி குடித்தனர். திடீர் கூட்ட நெரிசலால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
32.9லட்சம் பேர் குடிப்பவர்கள்
3.34 கோடி மக்கள் தொகையை கொண்ட கேரளாவில் 32.9 லட்சம் பேர் மதுக்குடிக்கின்றனர். சுமார் 5 லட்சம் பேர் நாள் தோறும் மது அருந்துகின்றனர். அவர்களில் 1043 பெண்கள் உட்பட 83,851 பேர் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.