காஷ்மீரில் பாதுகாப்பு படை- தீவிரவாதிகள் இடையே கடும் சண்டை.. 1 போலீஸ், 1 ராணுவ வீரர் பலி!
காஷ்மீரில் தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும், மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும், மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதையடுத்து காஷ்மீரில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரில் மொத்தம் 10000 பாதுகாப்பு படை வீரர்கள் களமிறக்கப்ட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ராணுவத்திற்கு குல்ஹாம் அருகில் இருக்கும் துரிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது.
இதனால் காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக தீவிரவாதிகளை பிடிக்கும் ஆபரேஷனில் இறங்கினார்கள். இந்த நிலையில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையின் போது, காஷ்மீர் பிரிவினைவாதிகள் பலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியும் தாக்கினார்கள். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் பலியானார்கள்.
மூத்த போலீஸ் அதிகாரி அமன் தாக்குர், ராணுவ அதிகாரி ரன்வீர் சோவீர் ஆகியோர் இதில் பலியானார்கள். அதே சமயம் மூன்று தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டார்கள். இவர்கள் மூன்று பேரும் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.