சஸ்பென்ட் செய்யப்பட்ட 5 அலுவலர்களை மீண்டும் பணியில் சேர்த்தார் ஸ்மிருதி இரானி
டெல்லி தனது கல்வி தகுதி குறித்த விபரங்களை வெளியிட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும் ஸ்மிருதி இரானி மீண்டும் பணிக்கு சேர்த்துள்ளார்.
சஸ்பெண்ட்டை திரும்பப் பெற்றாலும், இது தொடர்பாக விளக்கம் தர டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் ஸ்மிருதி இரானி, கடந்த ஆண்டு பட்டப் படிப்பில் சேர்ந்தாலும் தேர்வு எழுதவில்லை என்ற செய்தியை இந்தி பத்திரிகை ஒன்று அவரது பல்கலைக் கழக அடையாள அட்டையுடன் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, ரகசிய காப்பு விதிமுறைகளை மீறியதாக 5 அதிகாரிகளை டெல்லி பல்கலைக்கழகம் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் 5 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அவருக்கு கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரானி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறினார்.
இதற்கு பா.ஜ.க உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்தது. இரானியை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது துரதிருஷ்டவசமானது, அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுவார் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து கூறிய மத்திய ஜவுளித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், ''உங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்ன? என்று காங்கிரசாரை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேள்வி எழுப்பினார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
''என் கல்வித்தகுதியை பார்க்காதீர்கள், எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் எனது செயல்பாடு எப்படி உள்ளது? என்பதை பொருத்திருந்து பாருங்கள்" என்று கூறி ஸ்மிருதி இரானி கூறி இந்த பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
5 பேர் பணிநீக்கம்
இந்நிலையில், அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்களை கசியவிட்ட டெல்லி பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேர் நேற்று தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் ரத்து
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளார். சஸ்பெண்ட்டை திரும்பப் பெற்றாலும், இது தொடர்பாக விளக்கம் தர டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.
திக்விஜய் சிங் நன்றி
அமைச்சரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். அமைச்சரின் உண்மையான கல்வித்தகுதியை இப்போது நாடே அறிந்துகொண்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.