இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்- ரஜினிக்கும் பதிலடி?
Recommended Video
டெல்லி: இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சென்னையில் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் மத்திய அரசு இதனை தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழக அரசியல் கட்சிகள் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றன. இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை.
அதேநேரத்தில் ஈழத் தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது. தமிழக சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது உரையிலும் இதனை வலியுறுத்தி இருந்தார்.
சென்னையில் இன்று போயஸ் கார்டன் சாலையில் நடுத்தெருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த நடிகர் ரஜினிகாந்தும் கூட இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது ஏற்கனவே பாஜகவின் நிலைப்பாடாகவும் கருதப்பட்டது.
ரஜினி... தொடரும் தெருவோர பேட்டிகள்.. எப்ப சார் வீட்டுக்குள் கூப்பிடுவீங்க.. ஏக்கத்தில் நிருபர்கள்
சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூட இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. நாங்கள் இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்கமாட்டோம் என கூறவில்லையே என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் புதுச்சேரி அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன், இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் பதிலளித்தார்.
அவர் அளித்த பதிலில், அரசியலமைப்பு சாசனத்தின் 9-வது சரத்தின் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க இயலாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக எந்த ஒரு ஒப்பந்தம் செய்யும் திட்டமும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு கூறியிருந்த சிறிது நேரத்திலேயே மத்திய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதில் அதிமுகவுக்கு நேரடியாகவும் ரஜினிகாந்துக்கு மறைமுகமாகவும் கொடுத்த பதில் என்கிற கருத்தும் ஏற்படுத்தியிருக்கிறது.
மு.க. ஸ்டாலின் கண்டனம்
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே? அரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா?
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
ஈழத்தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை கோரிய போதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருவதாக கூறி ஏமாற்றிய அதிமுக + கூட்டணிக் கட்சிகள் எங்கே?
— M.K.Stalin (@mkstalin) February 5, 2020
அரசியல் சாசன பிரிவு 9ன் படி இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது என உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா?