புத்தாண்டு வாழ்த்துகளால் திணறிய வாட்ஸ் ஆப்... உலகம் முழுக்க முடங்கியது!
பிரபல அப்ளிகேஷனான வாட்ஸ் ஆப் புத்தாண்டு காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் போனது.
டெல்லி: பிரபல அப்ளிகேஷனான வாட்ஸ் ஆப் புத்தாண்டு காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் போனது. மக்கள் அனுப்பும் செய்திகள் எதுவும் பிறருக்கு செல்லாமல் இருந்துள்ளது.
இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த ஆப் செயலிழந்தது. மக்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவிக்க முயற்சித்த காரணத்தால் இப்படி நேர்ந்து இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே இப்படி வாட்ஸ் ஆப் வேலை செய்யாமல் போனது குறிப்பிடத்தக்கது.
செயலிழந்தது
உலகம் முழுக்க ஒரு மாதத்திற்கு சராசரியாக 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று சரியாக 11.30ல் இருந்து 1.30 வரை இரண்டு மணி நேரம் உலகம் முழுக்கு பலருக்கு வாட்ஸ் ஆப் வேலை செய்யாமல் போய் இருக்கிறது.
காரணம் என்ன
நேற்று பல நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதனால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பலர் வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக வாட்ஸ் ஆப் சர்வர் திணற தொடங்கியது. பின் மொத்தமாக செயல் இழந்தது. நேற்று மட்டும் ஒரே நேரத்தில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மறுபடியும்
வாட்ஸ் ஆப் கடந்த நவம்பர் மாதமும் இதேபோல் முடங்கியது. அப்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் அதற்கு சரியான காரணத்தை கூறவில்லை. மேலும் அதில் ஹேக்கர்கள் கை வரிசை இருக்குமா என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் வாட்ஸ் ஆப் தற்போது செயல்படாமல் போனதிற்கு காரணம் அதிக மக்கள் அதை பயன்படுத்தியதே என்று கூறப்பட்டு இருக்கிறது.
காரணம் பேஸ்புக்
வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியதில் இருந்து அதில் இது போல் நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து இதில் நிறைய அப்டேட்கள் விடப்படுவதால் இப்படி ஆவதாக கூறப்படுகிறது. இன்னும் நிறைய அப்டேட்கள் வாட்ஸ் ஆப்பில் வர இருப்பதால், இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வாட்ஸ் ஆப் நிறுவனம் குழம்பிக் கொண்டு இருக்கிறது.