ரூ. 500 கோடி பிட்காயின் கொடுக்கலைன்னா பயோகேஸ் தாக்குதல்.. பெங்களூர் விப்ரோவுக்கு மீண்டும் மிரட்டல்!
பெங்களூர் விப்ரோ நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக பயோகேஸ் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: விப்ரோ நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்து உள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்திற்கு கடந்த மாதம் 6ம் தேதி வந்த மின்னஞ்சலில் குறிப்பிட்ட இமெயில் ஐடிக்கு ரூ.500 கோடி பிட்காயின் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 29 நாட்களுக்குள் இந்த பணத்தை அனுப்பாவிடில் கடுமையான நச்சுத்தன்மை கொண்ட மருந்துப் பொடி விப்ரோ வளாகத்தில் தெளிக்கப்படும் என்றும் அந்த மிரட்டல் மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு சைபர் பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே மின்னஞ்சலில் இருந்து 72 மணி நேரத்திற்குள் பணத்தை அனுப்பாவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் பிட்காயினில் ரூ. 500 கோடியை கேட்டு உள்ளார். பணத்தை கொடுக்கத் தவறினால் விப்ரோ ஊழியர்கள் மீது பயோ-கேஸ் தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மிரட்டல் வருவதை அடுத்து விப்ரோ நிறுவனத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.