அன்னிய செலாவணி மோசடி வழக்கு: குற்றவாளி சுதாகரனை அழைத்து வருவதில் சிக்கல்..கர்நாடக சிறைத்துறை தகவல்!
அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக குற்றவாளி சுதாகரனை சென்னைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சுதாகரனை அழைத்து வருவதில் பாதுகாப்பு குளறுபடிகள் இருப்பதால் திடீரென அவரை அழைத்து வரும் முடிவை கர்நாடக சிறைத்துறை கைவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று தண்டனை உறுதியானதால் கடந்த பிப்ரவரி 15ம் தேதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பெண்கள் சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் ஆண்கள் சிறையில் சுதாகரனும் அடைக்கப்பட்டு 110 நாட்கள் கடந்து விட்டன.
இந்நிலையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சுதாகரனை ஆஜர்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் 10ம் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்டிப்பு காட்டினார். இதனையடுத்து சுதாகரன் நாளை சென்னை அழைத்து வரப்படுவதாக பரபரப்பு கிளம்பியது. இந்நிலையில் சுதாகரனை சாலை மார்க்கமாக அழைத்து வருவதில் சிக்கல் உள்ளதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி சத்யநாராயணராவ் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருவதால் சுதாகரனை அழைத்து வருவது பாதுகாப்பானதாக இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தமிழக போலீசாரும் சுதாகரனுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்டதால் சிறைத்துறை திடீரென முடிவை மாற்றியுள்ளது.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுதாகரனை சென்னை அழைத்து வர முடியாத காரணத்தை கூறி சுதாகரன் சார்பில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.