பெங்களூர் அருகே பஸ்சை வழிமறித்து பயணிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளை
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து அதில் பயணித்த வியாபாரிகளிடமிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூர் வில்சன்கார்டன் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருபவர் அப்துல்கான். இவரிடம் சாதிக்பாஷா மற்றும் சலீம் ஆகிய இருவர் வேலை பார்த்து வருகிறார்கள். தொழிலுக்கு தேவையான தங்கத்தை கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து கொண்டுவருவது அப்துல்கான் வழக்கம்.
இதற்காக நேற்று இரவு சாதிக்பாஷா மற்றும் சலீம் ஆகிய இருவரையும் கோழிக்கோட்டுக்கு ரூ.30 லட்சம் பணத்துடன் அப்துல்கான் அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் கர்நாடக அரசின் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் கோழிக்கோடுக்கு புறப்பட்டனர். இந்த பஸ் நள்ளிரவில் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் ராம்நகர் அருகே சென்றபோது கார் ஒன்று பஸ்சை முந்திச்சென்று நடுநோட்டில் வழிமறிப்பதுபோல நின்றது.
இதனால் பஸ்சை அதன் டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்தினார்.
காருக்குள் இருந்து டிப்-டாப்பாக உடையணிந்த நான்குபேர் கொண்ட கும்பல் இறங்கியுள்ளது. அக்கும்பலை சேர்ந்தவர்கள் பஸ்சுக்குள் ஏறி டிரைவரிடம் தங்களை குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீசார் என்று கூறிக்கொண்டு, "குற்றவாளிகள் இருவர் இந்த பஸ்சில் தப்பிச் செல்வதாகவும் அவர்களை கைது செய்ய வந்ததாகவும்" கூறியுள்ளனர்.
இதன்பிறகு பயணிகள் இருக்கை பகுதிக்கு சென்ற அவர்கள் சாதிக் பாஷா மற்றும் சலீமை அடித்து தங்களுடன் இழுத்துச் சென்று காரில் ஏற்றினர்.
கார் பெங்களூரை நோக்கி வந்துகொண்டிருந்தபோது பெங்களூரின் புறநகர் பகுதியான கெங்கேரியில் சாதிக் பாஷாவையும், சலீமையும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, அவர்கள் வைத்திருந்த பணப்பெட்டியுடன் அந்த கும்பல் காரில் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ராம்நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கொள்ளை கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
பரபரப்பு மிகுந்த நெடுஞ்சாலையில் நடைபெற்ற சினிமா பாணியிலான இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.