கேசிஆர்- ஸ்டாலின் சந்தித்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- துரைமுருகன் திடீர் சந்திப்பு
Recommended Video
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
வரும் 23-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதற்கு முன்னர் அரசியலில் எத்தனையோ அதிரடி திருப்பங்களும் திடீர் சந்திப்புகளும் ஏற்படுகின்றன.
3-ஆவது அணிக்கு அழைப்பு விடுக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர தலைநகர் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறுகையில் இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை. ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய போது முதல்வர், அமராவதியில் இருப்பதாக தெரிந்தது. இதனால் அவரை சந்திக்க சென்றேன் என துரைமுருகன் கூறியுள்ளார்.
அமராவதி தலைமை செயலகத்தில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.