ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்திக்கு மீண்டும் பணி வழங்கியது உ.பி.அரசு!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் துர்கா சக்தி நாக்பால். அம்மாநிலத்தில் உள்ள கடல்பூர் கிராமத்தில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தின் சுற்றுச்சுவரை இடித்ததாக இவரை கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அம்மாநில அரசு இடைநீக்கம் செய்தது.
ஆனால், மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக இவர் பல நடவடிக்கைகளை எடுத்ததால் தான் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்ற கூறப்பட்டது. இதையடுத்து உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது. உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் அம்மாநில அரசு இடைநீக்க உத்தரவை திரும்ப பெற மறுத்து வந்தது.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் தனது கணவருடன் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்து விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து, அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பணி வழங்கி உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.