ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்.. தமிழக அரசியலில் பரபரப்பு
Recommended Video
டெல்லி: திடீரென ஆதரவாளர்களுடன் டெல்லி விரைந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லிக்கு நேற்று இரவே சென்ற பன்னீர்செல்வம், இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்ற பன்னீர்செல்வத்திற்கு மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தமிழக சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்த கிறிஸ்ட்டி நிறுவனம், தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனம் எஸ்கேபி தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்ற நிலையில், பன்னீர் செல்வத்தின் திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க பன்னீர்செல்வம் விரும்பியதாகவும், அதற்கு நேரம் கிடைக்காத நிலையில் மூத்த அமைச்சர்களை சந்திப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசு அலுவல் நிமித்தமாக பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார் என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில், அதிமுக இணைப்பு காலகட்டத்தில் அடிக்கடி டெல்லி சென்ற பன்னீர்செல்வம், நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.