குரியனுக்கு இருக்கும் உணர்வு கூட இந்த மத்திய பாஜக அரசுக்கு இல்லையே!
டெல்லியில் இத்தனை நாட்களாக போராடும் தமிழக விவசாயிகளை ஏன் மத்திய அமைச்சர் சென்று பார்க்கவில்லை என்று ராஜ்யசபா துணை சபாநாயகர் குரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வருகிறது.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் குறித்து தமிழக எம்பிகள் தொடர்ந்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கூடிய ராஜ்ய சபாவில் திமுக எம்பி திருச்சி சிவா எழுந்து விவசாயிகளின் பிரச்சனை குறித்து மத்திய அரசு ஏன் மவுனம் காத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.
திருச்சி சிவா கேள்வி
மேலும், தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை திருச்சி சிவா குறிப்பிட்டார்.
பாஜகவிற்கு எம்பிகள் எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து சிபிஎம் எம்பி சீதாராம் யெச்சூரி, சிபிஐ எம்பி டி. ராஜா, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் விவசாயிகள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர்.
கொதித்தெழுந்த குரியன்
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜ்ய சபா துணை சபாநாயகர் குரியன் கோபமாக எழுந்து நீண்ட காலமாக டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மண்டை ஓடுகளுடனும், எலியை சாப்பிட்டும் போராடி வருகின்றனர்.
கண்டிப்பு
அன்றாடம் இதுகுறித்த செய்திகளை செய்தித்தாள்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களை ஏன் மத்திய அரசின் ஒரு பிரதிநிதி கூட நேரில் சென்று பார்க்க வில்லை என்று காட்டமாக பேசினார்.
நக்வி பதில்
அப்போது அவையில் இருந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவதாகவும், விரைவில் மத்திய அமைச்சர்கள் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார்.