தலைவர்களின் வாரிசுகளுக்கு அமைச்சரவையில் 'நோ-என்ட்ரி' போட்ட மோடி!
டெல்லி: பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி அளிப்பதை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து மாறுபட்ட அமைச்சகத்தை மோடி அமைத்துள்ளார்.
முக்கியமான அரசியல் தலைவர்கள் முயன்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் வாரிசு அரசியல்
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அரசியல் தலைவர்களின் வாரிசுகளுக்கு மிகுந்த முக்கியத்தும் கொடுக்கப்பட்டு அமைச்சர்களாக்கி கவுரவிக்கப்பட்டனர். தயாநிதி மாறன், அழகிரி, தீபிந்தர் ஹூடா, சச்சின்பைலட், மிலின்ட் தியோரா, ஜிட்டின் பிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் வாரிசுகள், உறவுக்காரர்கள் கேபினட் அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர்.
வாரிசுகளுக்கு சலுகை இல்லை
மோடி அமைச்சரவை வாரிசு அரசியலை புறம்தள்ளியுள்ளது. சஞ்சய்காந்தி மனைவி மேனகா காந்தி, முன்னாள் கப்பல் துறை அமைச்சர் வேதபிரகாஷ் கோயல் மகனான பியூஸ் கோயல் மற்றும் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர்சிங் பாதல் மனைவி ஹர்ஷிம்ராட் கவுர் ஆகிய மூவரும்தான் அரசியல் தலைவர்களை பின்புலமாக கொண்ட அமைச்சர்களாகும். இவர்களுக்குமே சிறப்பு திறமைகளின் அடிப்படையில்தான் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆனால் மிகப்பெரிய தலைவர்கள் முயன்று பார்த்தும் அவர்கள் உறவினர்களுக்கோ, வாரிசுகளுக்கோ அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
முதல்வர் மகனாக இருந்தாலும் 'நோ'
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜகவுக்கு பெற்றுத்தந்தவர் அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. ஆனால் அவரது மகன் துஷ்யந்த் சிங்கிற்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பாஜக மூத்த தலைவராக விளங்கிய யஷ்வந்த் சிங் மகன் ஜெயந்த் சின்கா, ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமால் மகன் அனுராக் தாக்கூர், மூன்றாவது முறை சட்டீஸ்கர் முதல்வராக பதவி வகிக்கும் ராமன்சிங் மகன் அபிஷேக் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
பாஸ்வான் மகனாக இருந்தாலும் கவலையில்லை
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யான்சிங்கின் மகன் ராஜ்பிர், பிரமோத் மகாஜன் மகள் பூனம், டெல்லி முன்னாள் முதல்வர் சாகிப்சிங் வர்மா மகன் பர்வேஷ் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை. பிகாரில் 31 சீட்டுகளை பாஜகவுக்கு பெற்றுத்தர உதவியாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் முயன்றும் கூட, அவரது மகன் சிராக்கிற்கு அமைச்சர் பதவியை பெற்றுத்தர முடியவில்லை.
சொல்வதை செய்ய வேண்டும்
மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல்காந்தியை இளவரசன் என்றுதான் அழைத்துவந்தார். அதாவது மன்னராட்சியில், அரசரின் மகனான, இளவரசன் அடுத்த மன்னனாக்கப்படுவார். மக்களாட்சியிலும், தலைவரின் வாரிசு என்பதற்காக பிரதமர் வேட்பாளராக்கப்படுவதைத்தான் மோடி கேலி செய்தார். எனவே தனது பேச்சுக்கு இணங்க நடக்க வேண்டிய கட்டாயத்தில் நரேந்திரமோடி உள்ளார்.