திருப்பதி போனா ‘மொட்டை’ போட்டு 2 லட்டு வாங்கிட்டு... கூடவே சவுரியும் வாங்கிட்டு வரலாம்!
திருப்பதி: திருமலையில் இனி மாதந்தோறும் இணையதளம் வாயிலாக தலைமுடியை விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி திருமலையில் முடி காணிக்கை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அவ்வாறு காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடுவது வழக்கம்.
ஆனால், அவ்வாறு செய்யும் போது தலைமுடியின் இருப்பு அதிகமாகி விடுவதால், இனி மாதந்தோறும் ஏலம் விட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:-
ரகம் வாரியாக பிரித்து...
திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை சுத்தம் செய்து, ரகம் வாரியாக பிரித்து, இணையதளம் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது.
தலைமுடி இருப்பு...
இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு, பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு மாதமும் ஏலம் நடத்தினால், தலைமுடியை இருப்பு வைக்காமல் முழுவதும் விற்பனை செய்ய முடியும்.
தலைமுடி ஏலம்...
இதனால், ஒப்பந்ததாரர் இடையில், தலைமுடியின் தேவையை அதிகரித்து, அவற்றை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியும்' என்றார்.
கூடுதல் லட்டுகள்...
இதேபோல், வைகுண்டம் காத்திருப்பு அறையில், ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு, 20 ரூபாய் விலையில் தேவஸ்தானம் இரண்டு லட்டுகளை வழங்கி வருகிறது. இன்று முதல், 50 ரூபாய் விலையில் கூடுதலாக இரண்டு லட்டுகள் அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.