தாஜ்மஹாலைப் பார்க்க “இ -டிக்கெட்” – தொல்லியல் துறை முடிவு
டெல்லி: உலக அதிசயமான தாஜ்மஹாலை கண்டுகளிக்க இ -டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஷாஜகான், மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது. தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இதனை கட்டும் பணி 1631 -ல் தொடங்கப்பட்டது.
தாஜ்மஹால் கட்ட 20,000 பேரின் உழைப்பு தேவைப்பட்டது. இந்தியாவின் அணைத்து பகுதிகளில் இருந்தும் கட்டிடம் கட்ட பொருள்கள் கொண்டு வரப்பட்டன. ஆயிரம் யானைகள் பயன்படுத்தப்பட்டன. அப்படியிருந்தும் தாஜ்மஹாலை கட்டி முடிக்க 21 வருடங்கள் ஆனது.
1653 ல் மிக நேர்த்தியாக தயாரானது தாஜ்மஹால். இந்த வெண் பளிங்கு கட்டிடத்தை வடிவமைத்தவர் ஈரானிய கட்டிடகலை நிபுணர் உஷ் தாத் இசா. 31 நிபுணர்கள் இந்த பணியில் உதவினர்.
பெர்சிய, மொகலாய கட்டிட பாணியில் கலைஞர்கள் தங்கள் கை வண்ணத்தை கட்ட அழகு பொக்கிஷமாக உருவெடுத்தது தாஜ் மஹால். நான்கு மூலைகளிலும் நன்கு மினார்கள் அமைக்கப்பட்டன. தாஜ் மஹாலுக்கு இது பெரும் கம்பீரத்தை சேர்த்தது. பின்னாளில் தனது மகனால் சிறைப்படுத்தபட்ட காலத்திலும் காதல் மனைவியின் நினைவு சின்னத்தை கண்டவாறே காலத்தை கழித்தார் காதல் மன்னன் ஷாஜகான்.
மரணத்திற்கு பின் காதல் மனைவியின் நினைவிடத்திற்கு அருகிலேயே துயில் கொண்டார் ஷாஜகான். பல வருடங்கள் ஆகியும் இன்னமும் இளமை துள்ளலோடு வசீகரித்து வருகிறது காதல் சின்னமான தாஜ்மஹால்.
புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வரும் தாஜ்மஹாலை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினசரி கண்டு களித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கணினி மூலம் பெறக்கூடிய இ டிக்கெட்டுகளை அங்குள்ள மூன்று வாயில்களிலும் அறிமுகப்படுத்த இந்திய தொல்லியல் துறை ஆயத்தமாகி வருகிறது.
மத்திய அமைச்சர் ராம் சங்கர் கத்தாரியா (ஆக்ராவைச் சேர்ந்தவர்) மற்றும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர் இந்திய தொல்லியல் துறைக்கு இதுதொடர்பாக ஆலோசனை தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள்.