கரன்சிக்காக அல்லோகல்லப்படும் தேசம்... நம்பிக்கை தரும் பணியில் தமிழகத்து 'கந்தன்'
'ரூபாய் நோட்டு' பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசின் செயலர் சக்திகாந்த தாஸ், தமிழக ஐஏஎஸ் அதிகாரியாவார்.
டெல்லி: நாடு முழுவதும் பணத் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பதற்றத்தை தணிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்திகாந்த தாஸ் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவ சக்திகாந்த தாஸ். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தை முடித்தவர்.
சக்திகாந்த தாஸ், தமிழகத்தின் 1980-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தவர்.
நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றவர் சக்திகாந்த தாஸ் . பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்த போது வருவாய்த்துறை செயலராகவும் அடுத்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கான பட்டியலிலும் சக்திகாந்த தாஸ் பெயர் அடிபட்டது. தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வருகிறார் சக்திகாந்ததாஸ்.
மக்கள் பதற்றப்பட வேண்டாம் என்றும் ஏடிஎம் மையங்களில் தற்போதைய நிலை குறித்தும் இன்று அவர் விவரித்தார். சக்திகாந்த தாஸின் அடுத்த அறிவிப்பு மக்களின் தற்போதைய சுமையை இன்னும் எளிமையாக்குமா என்பதே அனைவரது பெரும் எதிர்பார்ப்பு.