டெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரப்போகிறதாம்.. வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு
டெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: தலைநகர் டெல்லியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலைகள் ஏற்பட்டன. இதனால் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் பெரும் சேதத்தை சந்தித்தன.
பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் பலரின் மனதிலும் ஆறாத் தழும்பாய் பதிந்துள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் கடந்த சில நாட்களாக டெல்லியில் 9.1 அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட நாட்களில் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 9.1
மேலும் நாசாவின் கூற்றுப்படி, மிகப்பெரிய பூகம்பம் விரைவில் டெல்லிக்கு வரும். இது ரிக்டர் அளவில் 9.1 அல்லது 9.2 ஆகவும் இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலநடுக்கம் குர்கான் பகுதியை மையமாக கொண்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரியப்படுத்துங்கள்
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை டெல்லி பகுதியில் உள்ள உங்கள் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தெரியப்படுத்துங்கள் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
நாசா தகவல்?
மக்களை காப்பாற்ற அரசு மிகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.nasaalert.com சென்று தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வெறும் வதந்தி
ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்றும் இது வெறும் வதந்திதான் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. நாசா
பெயரில் வெளியாகும் இதுபோன்ற தகவல் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என இதற்கு முன்னரும் இதுபோன்ற வதந்திகள் பரவிய போது விஞ்ஞானிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.