நேபாளம், டெல்லியை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம் .. 7.4 ரிக்டராக பதிவானது
டெல்லி: நேபாளத்தினை மையமாகக் கொண்டு டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் டெல்லியின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனையடுத்து வீடுகளை விட்டு மக்கள் அலறியடித்து வெளியேறி சாலைகளில் குவிந்துள்ளனர். இந்நடுக்கமானது பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வடமாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தோனேஷியாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் ஆப்கன் நிலநடுக்கம் 4.7ஆகவும், இந்தோனேஷியாவில் 5.1 அலகுகாளாகவும் பதிவாகியுள்ளது. டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடம் உணரப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பதிவாகிய 7.4 என்ற ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமே இந்த நில அதிர்வுகளுக்கு காரணம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜெய்ப்பூர், ராஞ்சி, லக்னோ, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
சென்னையில் சாந்தோம், கோடம்பாக்கம், சூளைமேடு பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அதிர்ச்சியில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் உலக அளவில் இந்தியா, சீனா உட்பட 83 நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் சம்பல் பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததால் ஒருவர் பலியாகியுள்ளார்
இந்நிலையில் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு அருகில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில் நேபாளத்தில் பிற்பகல் 1.02 மணியளவில் மீண்டும் 2வதாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டரில் 5.6 அலகுகளாக கணக்கிடப்பட்டுள்ளது. மீண்டும் 1.21 மணியளவில் மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கமும் சக்தி வாய்ந்ததாகவே உணரப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை:
இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலநடுக்கம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையைக் கூட்டியுள்ளார். மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நிலநடுக்கம் குறித்த தகவல்கள் உள்துறை அமைச்சகம் சார்பில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வட மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது" என்று தெரிவித்துள்ளார்.