லடாக் லேவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு- கட்டிடங்கள் அதிர்ந்தன
லடாக்கில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
லடாக் : இன்று அதிகாலையில் லடாக் லே பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கிழக்கு லே பகுதியில் அதிகாலையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது கட்டிடங்கள் அதிர்ந்தன. லே பகுதியில் இருந்து 174 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டதாக லே பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்தவிதத்திலும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு லடாக் லே பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தால் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டன.
லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோராம் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை.