கிடுகிடுவென ஆடிய சந்திரன்... சந்திராயன் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தகவல்
டெல்லி : பூமியைப் போன்றே சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவதை சந்திராயன் 1 விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வு செய்த போது தெரிய வந்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் டெக்டானிக் பிளேட் என்றழைக்கக் கூடிய புவித்தட்டுகள் அமைந்துள்ளன. அவை நகர்கின்ற போது பூமியில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், பூமியின் துணைக் கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல தட்டுகள் அமைந்திருப்பதும், அவை நகர்கின்ற போது நிலநடுக்கம் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
சந்திராயன் 1...
இந்தியாவால் சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக அனுப்பப் பட்டுள்ள விண்கலம் சந்திராயன் ஆகும். இதில் பொருத்தப் பட்டுள்ள குறுகிய கோண கேமராவும், சந்திர வேவு கல கேமராவும் சந்திரனின் மேற்பரப்பினை படம் பிடித்து அனுப்பி உள்ளன.
ஆய்வு...
இந்தப் படங்களை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் நிலவியல் தொலை உணர்வு பேராசிரியரும், விஞ்ஞானியுமான சவுமித்ரா முகர்ஜியும், அவரது மாணவி பிரியதர்சினி சிங்கும் ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வில் தான், சந்திரனில் நிலநடுக்கம் குறித்து தெரிய வந்துள்ளது.
ஆதாரங்கள்...
இது தொடர்பாக பேராசிரியர் சவுமித்ரா முகர்ஜி கூறுகையில், ‘சந்திரனின் தென்துருவத்தில் பெறப்பட்ட தகவல்கள், சந்திரனின் மேற்பரப்பில் அடுக்குகள் நகர்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. அதுவும் இந்த அடுக்குகளின் நகர்தல், பூமியில் புவித்தட்டுகளின் நகர்தல் போலவே அமைந்துள்ளது.
இரண்டாவது அடுக்கு...
பூமியின் மேற்பரப்பில் உள்ள அடுக்குகளில் இரண்டாவது அடுக்கு எரிந்துகொண்டிருப்பதால், டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன. இரண்டாவது அடுக்கு எரிந்து கொண்டிருப்பதால், அங்குள்ள பாறைகள், கனிமங்கள், தாதுக்கள் உருகி பாகு போன்ற திரவ நிலையில் உள்ளன.
பூமியைப் போன்றே...
இதேபோன்ற நிலையை சந்திரனின் மேற்பரப்பிலும் காண முடிகிறது. எனவேதான், பூமியின் வடிவமைப்பில்தான் சந்திரனும் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டியதாகிறது. அந்த வகையில் பூமியில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும், சந்திரனில் ஏற்படுகிற நில நடுக்கத்தையும் ஒப்பிட்டு ஆராய முடியும்.