தென்னிந்தியர்களுக்கு கோவமும், ரோஷமும் ஏன் அதிகமாக இருக்கு தெரியமா..?
தென்னிந்தியர்களும், கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் உப்பு உட்கொள்கிறார்களாம். ஹூ நிர்ணயித்த அளவை விட 2 மடங்கு அதிகமாக இவர்கள் உப்பு சாப்பிடுகிறார்கள்.
டெல்லி: ஹூ எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட 2 மடங்கு உப்பு அதிகமாக சாப்பிடுகிறார்களாம் இந்தியர்கள். இதனால்தான் பல உடல் உபாதைகளில் இந்தியர்கள் சிக்குவதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதய நோய், இளம் வயது மரணம் ஆகியவை அதிகளவில் இருக்கக் காரணமே அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்வதுதான் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஜார்ஜ் குளோபல் ஹெல்த் மருத்துவக் கழகம் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. 19 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களிடையே அதிக அளவில் உப்பு பயன்பாடு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகம்
உலக சுகாதார நிறுவனம் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவிலான உப்பு உட்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளது. ஆனால் நமது சராசரி உப்பு உபயோகம் எவ்வளவு தெரியுமா.. 10.98 கிராம் ஆகும்.
தெற்கிலும், கிழக்கிலும் அதிகம்
தென் இந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்களில்தாம் அதிக அளவில் உப்பு சாப்பிடுகிறார்களாம் (அதான் இவர்களிடம் மட்டும் கோபமும், ரோஷமும் தூக்கலாக இருக்கிறதோ!) இதில் திரிபுரா முதலிடத்தில் இருக்கிறது. இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 14 கிராம் உப்பு சாப்பிடுகிறார்களாம்.
சாப்பாட்டு முறை மாறிப் போச்சு
கடந்த 30 ஆண்டுகளில் சராசரி இந்தியரின் சாப்பாட்டு முறை மாறி விட்டது. பருப்பு தானியங்களை குறைத்து சாப்பிடுகிறார்கள். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது குறைந்து விட்டது. துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
கொழுப்பு, உப்பு, இனிப்பு அதிகம்
இதன் காரணமாக கொழுப்பு, உப்பு, இனிப்பு அதிகம் சாப்பிடப்படுகிறது. இதனால்தான் பல உடல் உபாதைகள் கூடி விட்டன. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், இதய நோய்கள், பக்கவாதம் அதிகரிக்க இதுவே காரணம் என்பது ஆய்வுக் குழுவின் தலைவரான கிளேர் ஜான்சனின் கருத்தாகும்.
வேறுபாடு இல்லை
கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி உப்பு உட்கொள்வதில் பாரபட்சமே இல்லை நம்மவர்களிடம். இரு தரப்புமே அளவுக்கு அதிகமாகத்தான் உப்பை சாப்பிடுகிறதாம்.