இனி ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கான பில் குறையுமா?
ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் ஏசி ஹோட்டல்களுக்கான கட்டணம் குறையும் என தெரிகிறது.
டெல்லி: ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் ஏசி ஹோட்டல்களுக்கான கட்டணம் குறையும் என தெரிகிறது.
ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பே அதிகளவு இருந்தது.
ஜிஎஸ்டி வரியால் தொழில் உற்பத்தி துறை பெரும் பாதிப்பை சந்தித்தாக கூறப்பட்டது.
ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால் ஹோட்டல்கள் பெரும் இழப்பை சந்தித்தன.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
இதனால் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை போக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
வரிகள் குறைப்பு - அறிவிப்பு
இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்கும் முடிவுகளும் தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கும் சில முடிவுகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஏசி ஹோட்டல்களுக்கு குறைப்பு
ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஏசி மற்றும் ஏசி அல்லாத ஓட்டல்களுக்களுக்கான ஜி.எஸ்.டி விகிதம் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்களுக்கு 18 சதவீதம்
அதன்படி, ஏசி அல்லாத உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். ஏசி மற்றும் பார் உரிமம் பெற்றுள்ள ஹோட்டல்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மறு பரிசீலனை செய்யப்படும்
அதேநேரத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கான வரி 28 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சகத்தின் குழு, உணவகங்களுக்கு வரி விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யும் என்றும் ஜேட்லி தெரிவித்தார்.
வரி குறைப்பால் மகிழ்ச்சி
இதன்மூலம் ஏசி ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கான கட்டணம் இனி குறையும் என தெரிகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுர்வேதப் பொருட்களுக்கு குறைப்பு
அதிகளவான 28 சதவீத ஜிஎஸ்டி வரி பட்டியலிலிருந்து பல பொருட்கள் குறைவான வரி சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஆயுர்வேத மருத்துவ பொருட்கள், கையால் செய்யப்படும் நூல்கண்டு உள்ளிட்ட 27 பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.